Thursday, July 25, 2019

வறட்சி



பிரச்சனை:

வேர் வைக்கும் 
மரம் வைக்க
மறந்தோம்
மறுத்தோம்;
வேர்வைக்கும்
நீர் இன்றி
நிர்மூலமாய்
நின்றோம்

இருந்த குழாயில்
திறந்த தருவாயில் 
வந்த காற்று
எந்தன் பெருமூச்சே

பச்சை எங்குமே
நிச்சயமாய் இல்லை,
கருவேல மரங்களின் 
ஊர்வலம் மட்டுமே
கண்ணில் தென்பட்டது

கார் மேகங்களை 
யார் ஒருவரும்
பார்க்கவில்லை;
வேகமாக கலைந்த
மேகத்திற்கும் துளியும்
ஈரமில்லை;
தானாக தோன்றும்
கானல் நீரைக்கூட
காணவில்லை;
கண்ணுக்கு எட்டியவரை
தண்ணீர் ஊர்தியும்
தென்படவில்லை

வானம் பார்த்த
பூமி போய்
தண்ணீர் கொணரும்
வாகனம் பார்த்த 
பூமி ஆனோம்

வானத்தில்
காணாமல் போன
வானவில் 
தண்ணீருக்காக காத்திருந்த
குடங்களின் வரிசையில்
கிடந்தது

வறட்சி, நாட்டில் தான் 
அறவேயில்லை நம்
அறிவில், சிந்தனையில்;
மாத்தி யோசிப்போம்
மாத்தவே யாசிப்போம்;
தீர்வு காண
தீர்க்கமாய் முயலுவோம்

தீர்வு 1:

பருவமழை தவறுதலின்
கரு உலகம்
ஒப்பற்ற வேகத்தில்
வெப்பம் அடைந்ததில்
வெளிப்படையாக உள்ளது 

உலகம் இது
உலோகம் அல்ல,
ஏறும் சூட்டை
ஏதுவாய் ஏற்றுக்கொள்ள

முன்னேற்றம், மேம்பாடு, சொகுசு
என்ற நாகரீக நிர்பந்தத்தால்
அதீதமாக புவி சூடான
அநீதியில் மேலை நாடுகளுக்கு 
அதிக பங்கு உண்டு;
நியாயம், இழப்பீடு அவர்கள் 
நிச்சயம் தர வேண்டும்;
இருப்பினும், அவர்களின் தவறுகளை 
திரும்பவும் வளரும் நாடுகள்
தெரிந்ததேயேன் புரிய வேண்டும்

அணல் அடங்க
அனைத்தும் செய்வோம்,
அணிலாகவாது உதவிட
அணி வகுப்போம்

மக்கள் தொகையை
அக்கறையுடன் கட்டுப்படுத்துவோம்;
பொருட்களின் மேல்
பேராசை துறப்போம்

ஒருமுறை உபயோகத்தை
ஒரேடியாக ஒழித்த 
தலைமுறை நாமாவோம்;
அலட்சியத்தாலும், சோம்பலாலும்,
விரைவதாலும் வருகின்ற
விரயம் விலக்குவோம்;
மக்காக இல்லாமல் 
மக்காத பொருட்களை 
எக்காலத்திலும் தவிர்ப்போம்;
சுற்றுப்புற சூழலை
பற்றுதலோடு பாதுகாத்து
முற்றிலும் மதிப்போம்

தீர்வு 2:

பருவ மழையை
பெருமளவில் சேமிக்க 
பழந்தமிழர் கண்டது 
ஒன்பது வழிகள்
என்பது மாறி,
விலைக்கு வாங்கும்
நிலை கண்டு 
உலையிலிட்ட அரிசியாய்
தலை கொதித்தது

பூமிக்கு வந்த மழையை 
சேமிக்க ஏன் மறந்தோம்?
பார் போற்றும்
நீர் மேலாண்மையால்
தழைத்து இருந்தோமே,
பிழை என்ன
இழைத்தோம் இடையில்?

ஆறுகள் மலடானதற்கு
ஆறுதலே இல்லை;
ஏரியாவில் எங்கும்
ஏரிகளே இல்லை;
கம்மாய்கள் இங்கே
கம்மியாகி போயின;
கரனையை தொலைக்க
காரணம் நாமே;
தாங்கல் இழந்ததை
தாங்க இயலவில்லை;
ஏந்தல் இருந்திருந்தால்
ஏந்துவோமா கையை?
ஊரணி ஊனமானதால்
ஊரேயில்லை இனி;
குளங்கள் மிஞ்சின
கண்களில் மட்டும்;
குட்டைகளை எல்லாம்
ஆட்டையப் போட்டோம்

இதைப் போல்
விதை நெல்லை
உட்கொள்ளும்
முட்டாள்தனத்தை
கட்டாயம் 
விட்டாக வேண்டும் 

வாய்க்காலில் நீர் வடிய
வாய்ப்பு கொடுப்போம்,
வடிகால் இல்லாமல்
விடிவுக்காலம் இல்லை

ஆறு, குளம், குட்டைகளில்
தூர் எடுக்க
மணல் வாருவோம்,
கொள்ளையடிக்க அல்ல;
நதிகளின் நடுவே
அணைகளை கட்டுவோம்
அனைவருக்கும் பயன்பட,
அபகரிக்க அல்ல

நூறு வருடங்களானாலும்
ஆறுகளை இணனப்போம்,
தானாக கடலில் 
வீணாவதை தடுக்க

நிலத்தடி நீரை
பலப்படுத்துவோம்;
விழுந்த மழைநீர் 
பாழாகாமல் இருக்க
மண்ணில் ஊற வேண்டுமென்பதை
மண்டையில் ஏற்று

அடுத்த 
மழை வந்தவுடன்
பழைய பிரச்சனையைன
வறட்சியை
மறந்திடாதே;
மேகத்தில் மறைந்த
நிலவாய்,
தூக்கத்தில் உறைந்த
நினைவுகளாய்
மீண்டும் வரும்;
எனவே
மீள வழிகள்
வேண்டியே தீரும்

வெள்ளம் வறட்சி 
இரு துருவங்கள்
இருப்பினும்
நிறைய தீர்வுகள்
இரண்டிற்கும் 
ஒன்றே என்பதால் 
இன்றே களமிறங்குவோம்!
வறட்சி போக்க 
புரட்சி செய்வோம்!


© Ravishankar Palanivelu, July 25, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments


Image Credit:AP; Copyright:Satellite image ¬©2019 Maxar Technologies via AP

Friday, July 5, 2019

விரும்பியவை வட்டத்துக்குள்; Translated version in English: World of Wishes

பட்டம்
கொடி;
இரண்டுமே
உயரே பறந்தாலும்,
பற்றை ஒற்றையாய்
பறை சாற்றி
விளக்கும் கொடியாய்
விளங்கவே விழைகிறேன்

கொடி
குமிழி;
இரண்டுமே
காற்றில் மிதந்தாலும்,
கால்கட்டு கட்டுபாடின்றி
சுதந்திரமாக சுகமாக
திமிராக திரியும்
குமிழியாகவே குழைகிறேன்

குமிழி,
குழல்;
இரண்டிலிருந்தும்
அடைப்பட்ட காற்று
விடுதலை பெற்றாலும்,
சுழன்ற காற்றை
உழன்று உருட்டி
இசையாய் ஈன்றெடுக்கும்
குழலாகவே ஆசைப்படுகிறேன்

குழல்
முகம்;
இரண்டுமே
உணர்ச்சியின் வடிகாலாய்
கண்களை கொண்டிருந்தாலும்,
எண்ணில்லா செயல்களுக்கு
தாயுமான மூளையும்
வாயும் செவியுமுள்ள
முகமாகவே முனைகிறேன்

முகம்
பௌர்ணமி;
இரண்டுமே
ஒளிர்ந்து மலர்ந்தாலும்,
பாரபட்சம் ஏதுமின்றி 
பாரிலுள்ள அனைவருக்கும்
சமளவில் ஒளிரும்  
பௌர்ணமியாகவே பிரியப்படுகிறேன்

பௌர்ணமி
சூரியன்;
இரண்டுமே
ஒளி தந்தாலும்,
கடன் வாங்கி
கடமை ஆற்றாமல்
சுயமாக வெளிச்சமிடும்
சூரியனையே விரும்புகிறேன் 

சூரியன்
பட்டம்;
இரண்டையுமே 
அன்னாந்து பார்த்திட
எந்நாளும் நேர்ந்தாலும்,
தலைக்கு மேலிருந்தாலும்
வாலையும் தலையுமாட்டி
இட்ட கட்டளையேற்கும்
பட்டமாகவே பரிதவிக்கிறேன்


English translation of the above poem by Kirubakaran Pakkirisamy:

World of Wishes
---------------------------------
I’d rather be a flag than a kite
Both fly high and bright
But I stand for one -
And would like to be a flag in your sight

I’d rather be a bubble than a flag
Both float and about
But I dont wanna be tied down -
So would be a bubble all around and blown

I’d rather be a flute than a bubble
Both release the wind in them
But I want to make music -
Hence would like to be a flute and be in sync

I’d rather be a face than flute
Both of their eyes are full of emotions
But I am more intelligent
Thus wanna be a face with a brain behind

I’d rather be a moon than a face
Both can be bright
But I am fair and just
Therefore I would be a moon and to all I shed light

I’d rather be a sun than a moon
Both light up the sky
But I am original and do not borrow
Thats why I’d like to be sun and shine all day

I’d rather be a kite than a sun
Both of them are way up there
But I like my strings -
And I’m happy to go hither and thither for it
My world and a gravity
I would not escape, even if I could

© Ravishankar Palanivelu, July 5, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

Sunday, March 17, 2019

யார் குருடர்கள்?; Translated version in English: Blind Superiority


நீங்களோ பார்த்து விட்டு 
உணர்வீர்கள்,
நாங்களோ
உணர்ந்து விட்டு 
பார்க்கிறோம்

வானவில்லின் வர்ணங்களை
கண்டதில்லை நாங்கள்,
ஆனால்
பார்த்து
பாகுப்படுத்தும்
பழக்கம் இல்லாததால் 
நேர் கொள்ளும் 
அனைத்திலும் உள்ள
சிறப்பை
சிபாரிசு இல்லாமல்
குறிப்பறியும்
பழக்கம் எங்கள் 
வழக்கம்

ஐம்புலன்களில் 
நான்கை மட்டுமே கொண்டு 
நாலையும்
நாளும் 
நாங்கள்
தெரிந்துக் கொள்கிறோம்,
எனவே
குருட்டு தைரியம் என்று
ஒரு போதும்
உரைக்காதீர்

கண் இருந்தும்
பார்வை இல்லை,
ஆனால்
கண்ணார் போடும் 
கண்ணியமில்லா பழக்கமும்
கண்மூடித்தனமும்
கண்டிப்பாய் இல்லை

பார்த்து பழகி 
வேரூன்றிய 
காதலுக்கு 
கண்ணில்லை என்று
சமத்துவம் 
பேசும் நீங்கள்,
கண்ணில்லாமலேயே
கொண்ட 
எங்கள் காதல்
உன்னதமானது
என்ற
மகத்துவம்
அறிவீர்களா நீங்கள்?

எங்கள் காதல்
பார்க்காமல் வந்ததால்
வேர்விட்டு நீடிக்கிறது,
அதனால்
முதுமை வந்தபின்னும்
பழமை ஆவதில்லை

இருளின் 
பொருள் 
ஒளியினால்  
வெளிப் பட்டது,
ஒளி எங்களிடமிருந்து
ஒளிந்துக்கொண்டதால்
எங்களுக்கு
இருட்டு ஒரு
பொருட்டே
இல்லை

நீங்கள் கனவைப் பார்ப்பது
நாங்கள் நிகழ்வைப் உணர்வது போல,
எண்ணில்லா வித்தியாசம்;
நாங்கள் கனவைப் பார்ப்பது
எங்கள் நிகழ்வைப் உணர்வது போல,
என்ன உள்ளது வித்தியாசம்?

கவனம் எங்கள்
கவசம்;
நிதானம் எங்கள்
சாதனம்;
ஊன்றுகோல் எங்கள்
கண்;
எனவே 
எங்கள் வாழ்கையில்
குறை உண்டு
குறைவு இல்லை

எங்களிடம் இத்தனை
உயர்வு இருப்பினும் 
வியப்பு வரத்தானே
வாய்ப்பு, பின்னர் 
பரிதாபம் எப்படி
தவறாமல் வந்தது?
எங்களை இனி
கண்களால் 
காணாதீர்கள்,
சிந்தையால் மட்டுமே
வந்து
சந்தியுங்கள்.


English Translation by Kirubakaran Pakkirisamy:


Blind Superiority
---------------------------
No surprise you know it after you see it 
But we feel it first and then we can see it 
Isn’t our understanding more deliberate ?

Unfortunately we cannot see the colors of the rainbow
But visual appeal  does not color our opinions 
Isn’t our opinions more unbiased ?

True we lack one of the five senses
But we go by the rest of the four 
Isn’t our perception more complete ?

We have eyes no sight
But our eyes are never green with envy
Isn’t our vision less clouded ?

Pity that you proudly proclaim love is blind
But that we fell in without seeing
Isn’t our love purer ? 

Youth is appealing to the eye
But our love is unaffected by the age
Isn’t our love more timeless ?

Stumped are you by the darkness that shrouds reality
But unaffected are we by the lack of light
Isn’t our handicaps much lesser ?

Different from reality is your dreams 
But we watch our dreams and reality in the same way
Isn’t our views more consistent ?

A sincere appeal  - dont look and jump to conclusions blindly
Attention is our shield, patience is our virtue and the cane our eyes

Visualize all our strengths in your minds’ eye and give us our respect


© Ravishankar Palanivelu, March 17, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Sunday, February 17, 2019

வேற்றுமையிலும் ஒற்றுமை

இரை
இறை,
தேடுதல் மூலமே
கூடும் பலன்

கல்
கள்,
அடிப்பதால் வரும்
அடிக்கடி பிரச்னை

வால்
வாள்,
நீண்டால் தான்
உண்டாகும் கலகம்

காலை
காளை,
உழைக்க எழுந்தால்
பிழைக்க முடியும்

ஒலி
ஒளி,
புலன் இரண்டு
பலன் பெறும்

தோல்
தோள்,
காப்பாற்றும் வேலையில்
ஒப்பற்ற துணை

உரை
உறை,
உள்ளே வைத்து
உள்ளதை பற்றி

போலி
போளி,
உண்மை நிலையறிய
கண்கள் பத்தாது

கரை
கறை,
வேறுப்பட்டவை பற்றி
கூறுகின்ற விளிம்பு

மூளை
மூலை,
எங்கிருந்தோ வந்து
இங்கு சங்கமிக்கும்

இம்மி வித்தியாசத்தில்
இமாலய வேற்றுமை
இருப்பினும், அதனிடை
இருக்கும் ஒற்றுமையும்
தமிழில் அழகாய்
கமழ்வதை களிப்போம்!

© Ravishankar Palanivelu, Feb 17, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

Wednesday, December 19, 2018

கெட்டதில் நல்லது; Translated version in English: The Brighter Side

இத்து போனாலும்
முத்துப் போல
செத்தும் ஈர்க்க வேண்டும் 

தங்கிடும் பொழுதிலும்
நங்கூரம் போல
தாங்கி பிடித்திட வேண்டும் 

புதைந்தே போயிடினும்
விதைப் போல
பதைக்காமல் வெளிவர வேண்டும்

சரிந்திடும் போதிலும் 
சருகைப் போல
எருவாகி பயன்பட வேண்டும்

யார் அறியாவிடினும்
வேர் போல
நீர் தந்திட வேண்டும் 

நிலைக் குலைந்தாலும்
குலைவாழைப் போல
தலைக் குனிய வேண்டும் 

புழுங்கி தவித்தாலும்
குழல்காற்றுப் போல
உழன்று இசையாக வேண்டும் 

வீணாக்க நேரிட்டாலும்
கனாக்களைப் போல
கணக்கில்லாமல் கரைத்திட வேண்டும்

கூன் வீழ்ந்திடினும்
வானவில் போல
ஆனவுடன் மறைய வேண்டும்

நிர்பந்தத்தால் மடிந்திடினும்
கற்பூரம் போல
முற்றிலும் உருமாற வேண்டும்

வழி தவறினாலும் 
குமிழி போல
மகிழ்வதை தொடர்ந்திட வேண்டும் 

கட்டுப்பாட்டில் இருந்தாலும் 
பட்டம் போல
ஆட்டம் போட வேண்டும்

சீமையே தொலைந்தாலும்
ஆமைப் போல
அமைதி காத்திட வேண்டும் 

வன்மையே கலந்திருப்பினும்
அன்னம் போல
உன்னதத்தை பிரித்தெடுக்க வேண்டும் 

இன்னல் இக்கட்டு
என்றும் இருக்கும் 
என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

குறைகளின் வீரியத்தை
குறைக்க இயன்ற
வரை முயன்றிட வேண்டும் 

கிடைத்ததை கொண்டு
விடையைக் விடாமல்
கடைந்து எடுத்திட வேண்டும் 

கஷ்டத்திலும் நல்லது
நிச்சயம் சொட்டாவது
மிச்சமுள்ளதை உணர்ந்திட வேண்டும்

வன்மையிலும் ஒரு
நன்மையை திரித்தெடுக்கும்
தன்மையை கற்றிட வேண்டும்

--------------------------------------
Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy

The Brighter Side

Dead it might be
Still beautiful to the eyes to behold
It is the story of the pearl well told

Even dropped down to the sea
It is the anchor that had the hold
That should be a lesson in the cold

Buried and pushed 
Rise above solid ground
Like the sprouting seed and be found

Dried up in the sun and free
Like the leaves in the soil that fold
Be useful and help sprout again from seed

Hidden and unseen
Feed the plant with water and food
You are the root that does good

Trapped inside and trying to be free
Still make music like the wind in the flute
And make merry out of the misery in the chute

Just don't kill time
While away in dreams big and grand too
For one day one of them will become true

Forced to bend
Be like the rainbow bright and evanescent
And let the ignominy vanish without any dissent

Forced and put to the fire 
Glow like the candle bright
And share with the world your light

Lost and floating wayward
Be composed like the bubble in the air
And spread cheer to all those near and fair

Tied and pulled
Dance like the kite in the wind
And stay happy and cheerful in the mind

Lost battles and challenging war
Stay calm and keep moving forward
Like the perseverant turtle in the current onward

Violence all around you
Stay clear and free from oil like water
Encourage peace and let the vile shatter

Life is not a bed of roses
Problems and challenges are the way of life
Accept and handle, it is not really a strife

Every human has weaknesses
Be not discouraged and lose heart
Lower their impact every moment and get a head start

Stumped for an answer
Do good with whatever in hand
And mine the gold from the sand

Faced with distress
Have heart there is always hope and chance
Even the driest of desert has an oasis in its expanse

Misery or Penury 
There is some learning in the stride
You will come out winning on the other side

© Ravishankar Palanivelu, Dec 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Monday, October 29, 2018

பாலியில் கொடுமை


பாலியில் கொடுமை

பசி தான் என்றாலும்
பிறர் உணவை
பறித்தலை,
அவர் அனுமதியின்றி
அபகரித்தலை,
திருட்டு என்று
எடுப்பவரை தானே
சாடுகிறோம்,
ஆனால்,
பாலியல் விவகாரத்தில்
பலத்காரமாய்
தீண்டிய ஆணை
தண்டிக்காமல், மானத்தை
இழந்த பெண்ணையேன்
இழிக்கிறோம்?

தொட்டுவிட்ட
குட்டு வெளிப்பட்டதும்
பொட்டிப் பாம்பாய் ஆணின்
கொட்டமடங்கினாலும்
பட்ட துன்பம்
எட்டிப் பார்த்து
ஈட்டியாய் பாய்ந்து
வாட்டி வதைப்பது
பெண்ணை மட்டுமே!

எப்போதோ நடந்ததற்கு
இப்போது ஏன்
சர்ச்சை என
சப்பைக் கட்டும்
தப்பை என்னால்
ஒப்புக்கொள்ள இயலாது;
காலம் தாழ்ந்து வந்த
வெற்றிகளையும்
வெகுமதிகளையும் ஏற்றுக்கொள்ள
வெட்கப்படுகிறோமா?
வெறுக்கிறோமா?

பாலியல் தொல்லை
காயமாற நெடுங்
காலம் ஆகலாம்,
உள் காயத்தால்
உள்ளம் காயமானதால்
எழுந்த
தழும்பு மட்டும்
காலமாகாது

கொண்ட கொடுமையை
கொட்டி தீர்க்க
தட்டி கேட்க
சிலருக்கு
சில நாழிகைகளும்
பலருக்கு
பல வருடங்களும்
ஆகலாம்,
ஆனாலும் அதை
சொல்லும் தருணத்தை
நிர்ணயிக்கும் உரிமை
நிந்திக்கப்பட்டவர்களுடையது

துரிதமாய் சொன்னால்
உரிதான நடவடிக்கையை
உடனேவா
எடுத்துவிடப் போகிறோம்?

அடக்கமாய் இல்லாதது
எடுப்பாய் உடையணிந்தது
துடிப்பாய் பேசியது
வடிவாய் இருந்தது
பெண்ணின் தவறென்றும்,
ஆசைகளை அடக்கி
ஆள தெரியாத அப்பாவிகள்
ஆண்களென அவர்களுக்கு
வக்காளத்து வாங்கும்
வக்கீலாய் தானே
வந்திருப்போம்?

பாலியல் புரிந்தவரின்
புகழ், பெயர்
பதவி, பணம்
அந்தஸ்து, அதிகாரம்
சீறி வரும்
பெரும் புயல்,
அதற்கு
சரிசமமாக நின்று
சரியும் சருகு
எதிர் கொள்ளாதது
எதிர்ப்பார்த்தது தானே?

புகார்கள் ஒன்றும்
புதிரல்ல,
நம்ம மகள் சொன்னால்
நம்ப மறுப்போமா?
வேண்டியவள் என்றால்
வேடிக்கை பார்ப்போமா?

அருவருக்கத்தக்க பழக்கம்
அவர்களின்
அனுமதியின்றி கொள்ளும்
அணுகுமுறை தான்
அனு அனுவாய்
அவர்களை
சித்திரவதை செய்கிறது

பலவீனத்தை
பயன்படுத்தி
பலவந்தமாய்
பாலியல் பாவத்தை
புரிந்தவன்
பலசாலியல்ல;
வலிய வந்து
வலியை தந்து
வலிமையை காட்டி
வலையை விரிக்கும்
வஞ்சகசாலி

பாலியில் தொல்லைகளை
கண்மூடித்தனமாக செய்வதற்கும்
கண்டுக்கொள்ளாமல் மற்றவர்கள்
கை கழுவதற்கும்
ஆணிவேராய் இருப்பது
ஆண் ஆதிக்கமே!

© Ravishankar Palanivelu, Oct 29, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 


Friday, October 19, 2018

மரணத்தின் மேலேன் பயம் வரணும்?

அழையாமலே வந்த 
மழைப் போல்

தன்னாலே தழுவிய
தென்றலைப் போல் 

அறிவிக்காமலே விழுந்த
அருவியைப் போல்

கனநொடியில் கருவுற்ற
கனவைப் போல்

கையேந்தியவர்களை தவிர்க்கும்
கண்களைப் போல்

பின்னலிட்டு மறைந்த
மின்னல் போல்

நொடியில் நேரும்
மடியும் நேரம்,
தானாய் வரும்
சாகும் தருணம்

ஒருநாள் மரணம்
வருவது நிச்சயம்,
இறுதிமூச்சு என்பது
உறுதியென உணர்ந்தால்,
ஒற்றை நொடியில்
பற்றுதல் பறந்தோடும்,
இந்த உண்மையில்
எந்த சந்தேகமில்லை
இருப்பினும் எதற்கு 
இறப்பில் அச்சம்?
ஆயினும் மரணத்திலேன்
ஆனமட்டும் ஆதங்கம்?

நடப்புக்கு பின்
நடக்கப் போகும்
எதையும் அறியாமல்
சிதையில் புதைவதை,
சுகம் துக்கம்
அகம் அறியாததை,
சொந்த பந்தம்
செழிப்பதை காண
வழி இல்லாத்தை,
என்னை பற்றிய
புகழ் இகழ்
வாதம் பேதம்
எதிலும் ஒரு
போதிலும் செலுத்த 
இயலாது தாக்கம்
இறப்பினால் என்பதை,
எதையும் இனிமேல்
என்னால் உணரமுடியாததை,
மரணம் தருமென்பதை
உணர்ந்த உடன்
உலர்ந்து போனேன் 
உண்மையான ஐயத்தால்!

© Ravishankar Palanivelu, October 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments